இறையனார் அகப்பொருள்
発行者による作品情報
இறையனார் அகப்பொருள் என்பது ஒரு தமிழ் இலக்கணநூல். அகப்பொருள் இலக்கணம் கூறும் இந்த நூலை மதுரை ஆலவாய்க் கடவுள் இறையனார் இயற்றினார் என்று அதன் நக்கீரர் உரை கூறுகிறது. இறையனார் என்னும் பெயர் கொண்ட ஒருவர் இயற்றியிருக்கவேண்டும், அல்லது இந்த நூலை இயற்றியவர் யார் என்று தெரியாத நிலையில் இறையனார் இயற்றினார் எனக் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
இந்த நூல் கி.பி. ஏழாம் நூற்றாண்டு வாக்கில் தோன்றியிருக்கலாம். இந்த நூலுக்கு உரை எழுதிய நக்கீரர் தமது உரைக்கு மேற்கோளாகப் பாண்டிக்கோவை நூலிலுள்ள பாடல்களைத் தந்துள்ளார். பாண்டிக்கோவை கி.பி. எட்டாம் நூற்றாண்டு நூல். கட்டளைக் கலித்துறை இலக்கணம் கொண்ட பாடல்கள் முதலில் தோன்றிய காலம்.
இறையனார் அகப்பொருள் சொல்லும் செய்திகள்
தொல்காப்பியம் அகப்பொருள் இலக்கணத்தை அகத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல் என்னும் நான்கு இயல்களில் கூறுகிறது. இந்த 4 இயல்களில் 212 நூற்பாக்கள் உள்ளன. அந்த நூற்பாச் செய்திகளை இந்த நூல் 60 நூற்பாக்களில் சுருக்கமாகச் சொல்கிறது.
செவிலியை இந்த நூல் 'கோடாய்' (பெற்றுக்கொள்ளும் தாய்) என்று குறிப்பிடுகிறது. -நூற்பா 14
உள்ளத்திலோ, உரையிலோ, உடலிலோ உறவுக்களவு நிகழ்ந்த பின்னர்தான் கற்பு என்னும் மனைவாழ்க்கை நிகழும் -நூற்பா 15
கணவன் முன் மனைவி தன்னைப் புகழ்ந்துபேசுதல் எக்காலத்திலும் இல்லை. -நூற்பா 47
மனைவியின் ஊடலைத் தீர்க்க முடியாவிட்டால் கணவனும் மனைவியிடம் பிணக்கிக்கொள்வான். -நூற்பா 50
1.திணை, 2.கைகோள், 3.கூற்று, 4.கேட்போர், 5.இடம், 6.காலம், 7.எச்சம், 8.மெய்ப்பாடு, 9.பயன், 10.பொருள்கோள் என்று 10 கோணங்களில் அகத்திணைப் பாடல்களுக்குப் பொருள் காணவேண்டும். -நூற்பா 56
என்பன போன்ற செய்திகள் இந்த நூலில் காணப்படும் புதுமைகள்.